5 Jan 2010

*....எங்கேனும் ஒரு மூலையில்....*


















தேடித் தேடி
சலித்துவிட்டது.

பேருந்துகளிலும்
ரயில் வண்டிகளிலும்
ஒவ்வொரு சன்னலாய்
தேடிக் கொண்டிருக்கிறேன்
நீதானா என்று?

நேற்றுக் கூட..
உன் வருகைக்காக!

கடற்கரை முதல்
கோவில் வாசல் வரை
ஒவ்வோர் இடங்களிலும்
உனக்கான என் தேடல்
இன்னும் ஓய்ந்த பாடில்லை!

நண்பர்கள்
நகைக்கிறார்கள்
நகைக்கட்டும்!

பெற்றோர்கள்
வெறுக்கிறார்கள்
வெறுக்கட்டும்!

உடன் பிறப்புகள்
உதறுகிறார்கள்
உதறட்டும்!

பெரியவர்கள்
அறிவுறுத்துகிறார்கள்.
அறிவுறுத்தட்டும்!

எனக்கு
நீ மட்டும் தான்
வேண்டும்!
உன் பார்வை
மட்டும் தான்!

உன்னைத் தேடுவேன்
என் விழிகள்
பனிக்கும் வரை!

எந்தச் செடியில்
பூத்துக் கிடக்கிறாய்?

து£க்கத்தில் மட்டுமே
வந்து போகும் நீ
நேரிலே
வர மாட்டாயா?

சிலசமயம்
நடுக்கனவில்
எழுந்து விடுகிறேன்
உன்னைக் காண்பதற்கு!

மனதெல்லாம்
நிறைந்திருக்கும் உனக்கு
என்னபெயர் வைப்பதென்று
யோசித்து யோசித்து
கடைசியாக
என்பெயரில் பாதியையே
வைத்து விட்டேன்.

எங்கே இருக்கிறாய்?
ஒரே ஒருமுறை
காட்சி தா!

உன் வருகைக்கான
நம்பிக்கைகளுடன்
கொக்காய் காத்திருக்கிறேன்

--கே.ஆர்.விஜய்--

No comments: