ஒரு உலகப்போருக்குப் பின் நமக்குள் ஒரு ஒப்பந்தம் வரும் என்று நான் நினைக்கவில்லை.
விளையாட்டாக ஆரம்பித்த நாம் ஒரு பொழுதில் இந்தியா பாகிஸ்தானாக வார்த்தை ஏவுகணைகளை வீசிக்கொண்டோம். உன் கூழாங்கற்கல் வார்த்தைகளிலொன்று என் மனக்குளத்தில் சலனத்தை மட்டுமல்ல சங்கடத்தையும் தந்தபோது… கோபத்தை கொஞ்சம் ஒத்தி வைத்துவிட்டு ஏசுவின் சீடனாய் என் மறு கன்னத்தையும் தந்தேன். அதில்தான் உன் இரும்பு மனதும் கொஞ்சம் இளக ஆரம்பித்தது….
யதார்த்தமாய்த்தான் ஆரம்பித்தது அன்றைய சந்திப்பு; அர்த்தமுள்ள ஒரு நட்புக்கு விதை தூவும் என்று எண்ணியிருக்கவில்லை.
நட்புக்கு மேலாகவும் காதலுக்கு கீழாகவும் நலினமாய்… நாகரீகமாய்… ஒடும் ஒரு நயாக்ரா நதி நம் நட்பு…
இயந்திரங்களுக்கு இதயம் இல்லை என்று யார் சொன்னது தோழி...??? கம்ப்பியூட்டர் கண்ணாடியில் மின்னும் பாசத்தில் தோய்ந்த உன் வார்த்தைகளை பார்த்த பின்பும் எப்படிச் சொல்வது… இயந்திரங்களுக்கு இதயம் இல்லை என்று……..!!!!!!
நீ அன்று குழந்தையாய் கேட்டாயா இல்லை குறும்பாகக் கேட்டாயா;இல்லை குழப்பத்தில் கேட்டாயா???? நம் நட்பின் முடிவு எதுவென்று…???? எப்படிச் சொல்வது; அநேகமாய் உன் வருங்காலக் கணவனின் கையில்தான் நம் நட்பின் ஆயுள் ரேகை ஒடிக்கொண்டிருக்கும்…
நைல் நதியாய் நம் நட்பு நீள்வதும்;இல்லை நத்தையாய் சுருண்டு கொள்வதும்; அவர் சுட்டுவிரல்தான் சுட்டிக்காட்ட வேண்டும்…
கவலைப் படாதே தோழி…. காலம் கருணையுடையது… இருக்கும் வரை சிரித்துக்கொள்ள சில சந்தர்ப்பங்களை பரிசளிக்காதா… ?
இருதியில் பிரிவில்தான் நமது பிரியாவிடையென்றால் கண்ணை விட்டு கலையும் கனவாய்; பூவை விட்டு விழும் இதழாய்; உன்னை விட்டு நோகாமல் நகர்ந்து கொள்கிறேன்… நாம் சேமித்துவைத்த சந்தோஷங்களை மட்டும் நெஞ்சில் சுமந்து கொண்டே…